இந்தியாவில் தங்கையைக் காப்பாற்ற சென்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா(23).
இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வனப் பகுதிக்குள் சென்று விறகு சேகரிப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 3 மணி அளவில் விறகு சேகரிக்க வீட்டின் அருகே 300 மீற்றர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்துசென்ற போது, புதர்கள் மூடிய நிலையில் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
நடந்த சென்று கொண்டிருந்த தங்கையின் அலறல் சத்தம் கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த சுகன்யாவின் சகோதரர் தமிழழகன் மற்றும் அவரது சித்தப்பா மகன் முரளி ஆகியோர் ஓடி வந்தார்கள்.
உயிருக்கு உயிரான தங்கை கிணற்றுக்குள் விழுந்து தவித்ததைப் பார்த்ததும் இருவரும், அடுத்தடுத்து கிணற்றுக்குள் குதித்துள்ளனர்.
கிணற்றில் தண்ணீர் மற்றும் சேறு அதிகமாக காணப்பட்டதால் தங்கையைக் காப்பாற்ற முடியாமல் தவித்துள்ளனர். பின்பு கிராம மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து பொலிசாருடன், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் அந்த கிணற்றுக்குள் இறங்கி அவர்கள் 3 பேரையும் தேடியபோது, சேறு சகதியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
பின்னர் பல்வேறு போராட்டத்துக்குப் பின்னர் இரவு 7.30 மணிக்கு இளம்பெண் சுகன்யா மற்றும் முரளி, தமிழழகன் ஆகியோரின் உடல்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டு கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
தற்போது பிரேத பரிசோதனைக்கு 3 பேரின் உடல்களை பொலிசார் அனுப்பி வைத்துள்ள நிலையில், தங்கையைக் காப்பாற்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேர் இறந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.