திருப்பூரில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் எழுவாகரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(36), இவருக்கும் வினோதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ம் ஆண்டு பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
மூர்த்தி எலாஸ்ட்டிக் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாலாஜி நகரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வினோதா வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் வினோதாவுக்கு தான் பணி புரியும் பனியன் நிறுவனத்தில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் வினோதா தனது கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இது குறித்து மூர்த்தி ஊரக போலீசில் புகார் அளித்துள்ளார், அதன்பேரில் வினோதாவை அழைத்து அறிவுரை வழங்கி கணவருடன் அனுப்பி வைத்தனர். அதன் பின் ஒரு மாத காலமாக கணவருடன் வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மூர்த்தி வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் சாப்பிடுவதற்கு மதியம் வீட்டுக்கு மூர்த்தி வந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது, வீட்டில் வினோதா இருக்கும்போது கதவு சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் நேற்று வீட்டின் கதவு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது சமயலறையில் வினோதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார், இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி அவரை இறக்கி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார், அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த ஊரக போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி 6 வருடங்கள் கூட முழுமையடையாததால் ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி வருகிறார்.