சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம். தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக இருந்தார்.
செல்வரத்தினத்துக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் அகதிகள் முகாமில் குடியிருந்து வருகின்றனர். செல்வரத்தினம் மட்டும் தனியாக சென்னையில் தங்கியிருந்தார்.
இந்தநிலையில் செல்வரத்தினம் திருமணமான பெண் ஒருவரிடம் நட்பாக பழகி வந்தார். அதை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்திருக்கிறார்.
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் செல்வரத்தினம் விருதுநகருக்குச் சென்றிருந்த போது அந்தப் பெண்ணின் கணவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சூளைக்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதன்பேரில் அனைவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
அதன் பின்னர் தீபாவளிக்கு அடுத்தநாள் ( 15) காலை 6.25 மணியளவில் வீட்டின் முன் நடந்துச் சென்ற செல்வரத்தினத்தை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிக் கொலை செய்துள்ளது.
இதுதொடர்பாக செல்வரத்தினத்துடன் தங்கியிருந்த தனசேகர் என்பவர் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதேவேளை கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொலையாளிகள் உடைத்துவிட்டு சென்றுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.