உலக நாடுகளை புட்டிப் போட்ட பேரனர்த்தம்! இன்றுடன் 16 ஆண்டுகள் – மக்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

2004 டிசம்பர் 26 ஆம் திகதி சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு உலக நாடுகள் அனைத்திலும் பாரிய அழிவை ஏற்படுத்தியது.

இது வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு கறுப்பு தினமாக உள்ளதுடன், இன்றுடன் இந்த சம்பவம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் 30 ஆயிரத்து 196 உயிர்கள் இலங்கையிலும் காவுகொள்ளப்பட்டன.

21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர்.

ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் நிர்க்கதியாகினர்.

அதுமட்டுமன்றி சொத்துகள், உடைமைகள் சேதமடைந்தமையினால் கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பெரும் பாதிப்படைந்தன.

இந்த நிலையில் சுனாமி ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இன்றை தினமும் ஆழிப்பேரலை நினைவுகளை மீட்டும் பல்வேறு நினைவஞ்சலி நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

அந்த வகையில் இலங்கை மக்கள் அனைவரையும் இன்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9.25 மணிக்கு அனைவரும் கண்களை மூடி உயிரிழந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுக்கப்பப்டுள்ளது.