ஜெயம் ரவி, மனைவி ஆர்த்தி விவாகரத்து: காதல் செத்துவிட்டதா என ரசிகர்கள் புலம்பல்

குடும்ப ஆடியன்ஸ் கொண்டாடும் ஹீரோவான ஜெயம் ரவியின் 44வது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரை கவலையுடன் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். அதற்கு காரணம் ஜெயம் ரவியின் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் தான்.

தன் காதல் மனைவியான ஆர்த்தியை பிரிவதாக நேற்று சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயம் ரவி. அதை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்தார்கள். ஜெயம் ரவியும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 15 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.

பேட்டிகளில் தன் மனைவியை பற்றி எப்பொழுதுமே பெருமையாக பேசி வந்தவர் ரவி. என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் நான் இந்த நிலையில் இருப்பேனா என தெரியவில்லை. எனக்காகவே அவர் வாழ்கிறார். எனக்காக பிரார்த்தனை செய்கிறார் என்றார் ஜெயம் ரவி.

அப்படி பேசிய மனைவியை பிரிய எப்படி மனம் வந்தது ஜெயம் ரவி என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ஆர்த்தி. ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.

இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராமில் இருந்து தன் காதல் கணவர், மகன்களின் புகைப்படங்களை எல்லாம் நீக்கினார். அவரின் புகைப்படங்கள் மட்டுமே உள்ளது. அதை பார்த்தவர்களோ ஜெயம் ரவியும், ஆர்த்தியும் விவாகரத்து பெறப் போகிறார்கள் போன்று என பேசத் துவங்கினார்கள்.

விவாகரத்து பேச்சு கிளம்பியபோது ஜெயம் படம் ரிலீஸாகி 21 ஆண்டுகள் ஆனதை கொண்டாட இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டார் ஆர்த்தி. அதை பார்த்தவர்களோ நானும், ஜெயம் ரவியும் பிரியவில்லை என்பதை அழகாக விளக்கிவிட்டார் என்றார்கள்.

காதல் என்னும் வார்த்தை அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்கிற கேப்ஷனுடன் ஆர்த்தி போட்ட ஸ்டோரி ரசிகர்களை நிம்மதி அடைய செய்தது. ஜெயம் ரவியும், ஆர்த்தியும் உருகு உருகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் அந்த கேப்ஷன் அவர்களுக்கு பொருத்தமாக இருந்தது.

எல்லாம் நல்லா தான் செல்கிறது என ரசிகர்கள் சந்தோஷப்பட்ட நேரத்தில் விவாகரத்து முடிவை அறிவித்தார் ஜெயம் ரவி. இந்த ஜோடி விவாகரத்து பெறும் என யாருமே நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி இருக்கும் போது ஜெயம் ரவியும், ஆர்த்தியும் பிரிந்ததை காதலை கொண்டாடுபவர்களால் ஏற்கவே முடியவில்லை.