முக அழகாக இருக்க தினமும் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும்.
முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ…

வேப்பிலை:
முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.

வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

தேன்:

தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும்.

சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும், இந்த ‘ஃபேஸ் பேக்’ முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.