அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி முதல்வர் பதவி ராஜினாமா முடிவுக்கு என்ன காரணம்? அடுத்த முதல்வர் யார்?


டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

சிறையில் இருந்து பிணையில் வெளிவந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், கட்சித் தொண்டர்களிடம் பேசிய அவர் இன்னும் இரண்டு நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

கட்சித் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமைந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

“மக்கள் ஒரு முடிவெடுக்கும் வரை இனி நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று கட்சித் தொண்டர்களிடம் அவர் பேசியுள்ளார்.

“நான் மக்களிடம் செல்கிறேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் திறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது.

அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் அமன்தீப் சிங் தால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசிய கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.